கோலாலம்பூர், மார்ச் 27 – மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின்கீழ் கொண்டுவரும்படி மித்ரா பணிக்குழுவின் முன்னாள் தலைவரும் தொழில் முனைவர் மேம்பாடு , கூட்டுறவுத்துறை துணையமைச்சருமான டத்தோ ரமணன் கிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக தாம் விரைவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்து மித்ரா பிரதமர்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஆலோசனையை தெரிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய சமூகத்தின் முக்கிய அமைப்பாக திகழும் மித்ரா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்காணிப்பின் கீழ் இருப்பதுதான் பாதுகாப்பானது என ஏற்கனவே இந்திய சமூகத்தைச் சேர்ர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருப்பதையும் ரமணன் சுட்டிக்காட்டினார். ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்காக அன்வார் இப்ராஹிமிற்காகத்தான் இந்திய சமூகம் வாக்களித்தனரே தவிர எந்தவொரு அமைச்சருக்காக அல்ல என்றும் ரமணன் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் நாம் உண்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். பிரதமர் அன்வார் மீது நம்பிக்கை அளித்து 90 விழுக்காடு வாக்குகளை இந்திய சமூகத்தினர் அளித்துள்ளனர் என பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.
இதர அமைச்சுகளைவிட பிரதமர்துறையின் கீழ் அடிப்படை வசதிகளும் வளங்களும் முன்னேற்றம் கண்டுள்ளன. மித்ரா போன்ற அமைப்புக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான நிர்வாக உதவிக்கு பிரதமர் துறை உதவியாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். மித்ராவில் தாம் தலையிடும் நோக்கத்தையோ அல்லது ஒற்றுமைத்துறை அமைச்சை தவறாக கூறவில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள நிலவரங்களை பார்க்கையில் இந்திய மக்களின் சுபிட்சம் மற்றும் நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு மித்ராவுக்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என தாம் கருதுவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார். ஏற்கனவே இந்திய சமூகத்திற்காக நான்கு பெரும்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது மித்ராவுக்காக புதிய ஆலோசனை நிறுவனம் அமைக்கப்பட்டது தேவையில்லது ஒன்றாகும் . நாங்கள் பல ஆண்டுகாலமாக மலேசியாவில் இருந்துவருகிறோம். இந்திய சமூகத்தின் சிரமத்தை நாம் ஆராய்ந்திருக்கிறோம். அவர்களது வாழ்க்கை நிலை எப்படியிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். எனவே மற்றொரு ஆய்வு தேவையில்லாத ஒன்று என ரமணன் தெரிவித்தார்.