![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-24-Dec-2023-08-42-AM-1002.jpg)
புத்ராஜெயா, டிச 24 – மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, பிரதமர் துறையிலிருந்து மாற்றப்பட்டு மீண்டும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
அதே வேளையில் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான அந்த சிறப்புப் பிரிவை தொடர்ந்து தாம் கண்காணிக்க விருப்பதாக அவர் உறுதியளித்தார். மித்ராவுக்கு 2017ஆம் ஆண்டில் அப்போது பிரச்சனைகள் இருந்தன என்பது எங்களுக்கு தெரியும்.
எனவே, ஒரு வருடத்திற்கு முன்பு, ஒற்றுமை அரசாங்கத்தில் நாங்கள் அதைச் சரிசெய்தோம். அங்கு திட்டங்கள் மிகவும் வெளிப்படையாக இருந்ததோடு அதன் அணுகூலங்கள் அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு மக்கள், மாணவர்கள் மற்றும் பலருக்கு சென்றது என அன்வார் கூறினார்.
தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது, நான் அதை ஒற்றுமை அமைச்சிற்கு மாற்ற முடியும், ஆனால், நான் அதை இன்னும் கண்காணிக்கிறேன் என்று நேற்று மின், அச்சு மற்றும் வலைத்தள ஊடகங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
மித்ராவின் நிர்வாகம் வேறு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதைப் பற்றி இந்திய சமூகம் கவலைப்படத் தேவையில்லை என்று அன்வார் வலியுறுத்தினார். விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டு, அதிகார துஷ்பிரயோகம் அல்லது முறைகேடுகளைத் தடுக்க அந்த பிரிவு இன்னும் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது என்று அன்வார் கூறினார்.