
கெடா, ஜூலை 30 – மியான்மாருக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை அடையாளம் காணும் பரிசோதனை நடவடிக்கையை மலேசிய உள்துறை அமைச்சு தொடங்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் ( Datuk Seri Saifuddin Nasution Ismail) கூறுகையில், போலீஸ் மற்றும் குடிநுழைவுத் துறையுடன் இணைந்து அகதிகளின் அடையாளம் மற்றும் அகதி அந்தஸ்தை உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
நாடு முழுவதுமுள்ள 19 குடிநுழைவு தடுப்பு மையங்களில் தற்போது சுமார் 22,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 4,000 பேர் மியான்மார் நாட்டவர்கள், இதில் ரோஹிங்கியாக்களும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டவர்கள் ஒரே தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார்கள். அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பிறகு, அவர்களுக்கு அகதி அந்தஸ்தை உறுதிப்படுத்தும் ஆவணம் வழங்கப்பட்டு, பின்னர் வெளியுறவு அமைச்சின் ஒருங்கிணைப்பில் மியான்மாருக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.



