![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-24-Mar-2024-12-53-PM-4849.jpg)
குளுவாங், மார்ச் 24 – குளுவாங்கிற்கு அருகே Renggam – Mengkibol லின்
679. 5 ஆவது கிலோமீட்டரில் மலேயன் ரயில்வேக்கு சொந்தமான ரயில் இயந்திரம் மோதியதில் யானைக் குட்டி ஒன்று மடிந்தது. ஜோகூர் பாரு Sentral லிருந்து சிகமாட்டை நோக்கி 70 பயணிகளுடன் அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது நேற்றிரவு மணி 8.19 அளவில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Bahrain Mohd Noh தெரிவித்தார். ரயில் தண்டவாள பகுதிக்கு அருகேயுள்ள பாதுகாப்பு வேலியை நாசப்படுத்திவிட்டு யானைக்குட்டி உட்பட மூன்று யானைகள் உள்ளே புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு யானைகள் தண்டவாளத்தை வெற்றிகரமாக கடந்து அருகேயுள்ள Simple Farm பழத் தோட்டத்தில் நுழைந்ததாக Bahrain வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த விபத்தினால் ரயில் இயந்திரத்தின் இடது புற பகுதி சேதம் அடைந்ததால் அதன் பயணத்தை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பிறகு மற்றொரு ரயில் இயந்திரம் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு இரவு மணி 10.40 அளவில் சென்றதைத் தொடர்ந்து ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணம் தொடர்ந்தன. இந்த சம்பவத்தின்போது ரயில் பயணிகள் எவரும் காயம் அடையவில்லை. மடிந்த யானைக்குட்டியின் உடல் அருகேயுள்ள பகுதியில் புதைக்கப்பட்டது.