
கோலாலாம்பூர், மே-13-இந்து ஆலயங்கள் விவகாரத்தில் மடானி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக, முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தியை, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் சாடியுள்ளார்.
அரசாங்கம் இந்து ஆலயங்களை அவமதிப்பதாக வேதமூர்த்தி கூறுவது பொறுப்பற்ற செயலாகும் என கண்டித்த அவர், இத்தகைய தூண்டுதல் பேச்சுகள் இனங்களுக்கு இடையே பதற்றத்தை மட்டுமே உருவாக்கும் என எச்சரித்தார்.
ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் ஆலய நிலப் பிரச்னைகளை, சட்ட ரீதியாகவும் ஆலோசனைகள் மூலமுமே தீர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து இனங்களுக்குமான தலைவராகச் செயல்பட்டு வருகிறார் என்றும், மித்ரா அமைப்புக்கு வழங்கப்பட்ட 150 மில்லியன் ரிங்கிட் போன்ற பல நிதி உதவிகள் இந்தியச் சமூகத்திற்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
எனவே, வெறுப்பு அரசியலை கைவிட்டு, நாட்டின் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, பி.கே.ஆர் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினருமான குணராஜ் கேட்டுக்கொண்டார்.
அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளைத் தூண்டுவதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு அவர் வேதமூர்த்திக்கு அறிவுறுத்தியுள்ளார்.



