ஈப்போ, மார்ச்-1,கடந்த மாதம் அமைச்சர் ஒருவரது அதிகாரத்துவ வாகனம் அம்புலன்ஸ் வண்டியைப் பின் தொடர்ந்துச் சென்ற விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.
வைரலான அச்சம்பம் மீதான போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டது; நீதிமன்றமும் நடவடிக்கை எடுத்திருப்பதால், அவ்விவகாரம் முடிவுக்கு வருவதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.
அமைச்சரின் காரோட்டுநருக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து, விசாரணை முழுமைப் பெற உதவியதாக முஹமட் யுஸ்ரி கூறினார்.
சிம்பாங் பூலாய் செல்லும் வழியில் தாப்பா அருகே PLUS நெடுஞ்சாலையின் அவசரப் பாதையில் பிப்ரவரி 8-ம் ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்து பின்னர் பெரும் வைரலானது.
அமைச்சர் வாகனமே சட்டத்தை மீறுவதா என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சரான, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங், காரில் இருந்த அந்த அமைச்சர் தாம் என்பதை ஒப்புக் கொண்டு, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அறிவித்தார்.
சாலை விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டால், தனது ஓட்டுநர் சார்பில் அதனைத் தாமே செலுத்துவதாகவும் கோர் மிங் சொன்னார்.
இந்த நிலையில் காரோட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவ்விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.