கோலாலம்பூர், பிப் 9 – துன்புறுத்தப்பட்டதால் இந்தோனேசிய வேலைக்காரப் பெண் அடேலினா லீசாவ் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது தாயாருக்கு 750,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி இரண்டு பெண்களுக்கு பினாங்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமது மகளின் மரணத்திற்கு கவனக்குறைவு மற்றும் உடன்பாடு மீறப்பட்டதால் அவரது தாயார் யோஹானா பானுனேக் இழப்பீடு கோரி தொடுத்திருந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை இந்த தீர்ப்பை வழங்கினார்.
பிரதிவாதிகளான R. ஜெயவர்த்தினி மற்றும் அவரது தாயார் S. அம்பிகா ஆகியோர் ஏற்படுத்திய காயங்களினால் வேலைக்காரப் பெண் அடேலினா இறந்தார். எனவே பிரதிவாதிகள் அலட்சியம் மற்றும் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டதால் அடேலினாவின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மரணத்திற்காக, தீவிர பாதிப்புக்கு 5 லட்சம் ரிங்கிட் இழப்பீடு தொகையையும் பொதுவான இழப்பீடாக 250,000 ரிங்கிட்டையும் பிரதிவாதிகள் வழங்க வேண்டுமென நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை தீர்ப்பளித்தார். அடேலினா நியாயமற்ற வகையில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டிருப்பதை மருத்துவ ஆதாரங்கள் காட்டியிருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.