![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-08-Mar-2024-10-04-AM-7272.jpg)
கோலாலம்பூர்,மார்ச்-8, மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கழகம் SME Corp-பிடம் இருந்து கடந்தாண்டு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவர்கள் மொத்தமாக 23 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றிருக்கின்றனர்.
கடந்தாண்டு தங்களிடம் இருந்து நிதியுதவிப் பெற்ற 2,708 பேரில் அது 40% என தொழில் முனைவர் – கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் அந்நிறுவனம் கூறியது.
ஆண்டுதோறும் அவ்வுதவிப் பெறுநரில் குறைந்தது 30% பெண் தொழில் முனைவர்களாக இருக்க வேண்டும் என்ற தங்களின் இலக்கும் அதன் வழி நிறைவேறியிருப்பதாக SME Corp தலைமை செயல் அதிகாரி ரிசால் நாய்னி மகிழ்ச்சியுடன் கூறினார்.
பெண் தொழில் முனைவர்களுக்கு அதிகம் நன்மைப் பயக்கும் திட்டங்களில், BizMe எனப்படும் சிறு தொழில் முனைவர் வியாபார மேம்பாட்டுத் திட்டம் முதன்மையானது என்றார் அவர்; அதில் பங்கேற்றவர்களில் 48% பெண்களாவர்.
PMKS தொழில் முனைவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் இவ்வாண்டு MyBPI என்ற பெயரில் இணையம் வாயிலான விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ரிசால் சொன்னார்.
இன்று கொண்டாடப்படும் அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு SME Corp அப்புள்ளி விவரங்களை வெளியிட்டது.