![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-16-Jun-2024-11-01-AM-4215.jpg)
ரந்தாவ், ஜூன் 16 – கூட்டுறவுக் கழகங்களின் இலக்குகளையும், அவைகள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் கண்டறிய, இந்திய சமூக கூட்டுறவு மாநாடு ஒன்று நடத்தப்படும் என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
நாட்டில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. அதில் 400க்கும் மேற்ப்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் இந்தியர்களுக்குச் சொந்தமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
அதில் பல கழகங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையில், சில கழகங்கள் செயல்படாமல் செயலிழந்து உள்ளன.
அக்கழகங்களை எல்லாம் ஒன்றுப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும் என்றார் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையம்மசர் டத்தோ ரமணன்.
இதனிடையே, மலேசிய கூட்டுறவு ஆணையம் SKM ஏப்ரல் மாத நிலவரப்படி பெரிய அளவிலான திட்டங்களில் ஈடுபடும் கூட்டுறவுகளுக்கு RM 85.9 மில்லியன் ரிவால்விங்க கேபிடல் ஃபண்ட் (Revolving Capital Fund) நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளதையும் அவர் தெரிவித்தார்.
இணை நிதி (PKTC), மைக்ரோ கூட்டுறவு நிதி (MicCoopFi-1), ஸ்டார்ட்-அப் நிதி (SuFi-1), நிலையான நிதி (LesFi-1), சிறந்த 100 கூட்டுறவு நிதி (Best100Fi-1) மற்றும் நல்ல ஊதிய மாஸ்டர் ஆகியவை அதில் அடங்கும்.
அதிகபட்சமாக RM 30 மில்லியன் பாதுகாப்பான நிதியுதவி மற்றும் RM 200,000 பாதுகாப்பற்ற நிதியுதவியும் அளிக்கிறது என நேற்று நேசாவின் தாமான் நேசா டெலிமா வீட்டுத் திட்டத்திற்கான சாவியை கையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.