ஜகார்த்தா, மார்ச்-20, சாலைகளில் நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ இந்தோனீசிய நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பாப்புவா பிரதேசத்தில் அவ்வீடியோ எடுக்கப்பட்டு டிக் டோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அழையா விருந்தாளிகளாக சாலைக்குள் புகுந்து துள்ளும் மீன்களை பொது மக்கள் துணிப் பைகளில் மும்முரமாக அள்ளிப் போடுவது வீடியோவில் தெரிகிறது.
அது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், கவலைத் தெரிவிப்போரும் இருக்கவே செய்கின்றனர்.
அதாவது, மீன்கள் கரைக்கு வந்தால் பரவாயில்லை, தரைக்கு எப்படி வரலாம்? இது நல்ல நிச்சயம் நல்ல சகுனம் அல்ல என அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“ எச்சரிக்கையாக இருங்கள். என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என நெட்டிசன் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
இவ்வேளையில் வீடியோவைப் பதிவேற்றிய பெண், Merauke பகுதியில் அப்படி மீன்கள் சாலைக்குள் புகுந்து துள்ளுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் என கூறினார்.
Ikan puyu எனப்படும் வெட்டுமீன்கள், நீர் வற்றிய சதுப்பு நிலத்தில் இருந்து, நீர் அதிகமுள்ள சதுப்பு நிலங்களுக்கு மாறிச் செல்லும் வழியில் தான் சாலைக்குள் புகுந்து விடுகின்றன என்றார் அவர்.