ஜியோர்ஜ்டவுன், மார்ச் 11 – வாகனமோட்டிகளிடம் இழப்பீடு பணம் கோரும் நோக்கில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் பலே ஆடவனை பினாங்கு போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
அந்நபர் குறித்து டிசம்பரில் தாங்கள் புகாரைப் பெற்றதாக, தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லான் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
Georgetown, Jalan Masjid Negeri, Bukit Gambir, Taman Lip Sin, Taman Tun Sardon போன்ற இடங்களில் திட்டமிட்டு வேண்டுமென்றே விபத்துகளை உருவாக்குவதை அவன் வாடிக்கையாகக் கொண்டுள்ளான்.
மோட்டார் சைக்கிளில் வரும் அந்நபர் கார்களை மோதி, அந்த விபத்துக்கு கார் தான் காரணம் எனக் கூறி காரோட்டிகளிடம் பணம் பறிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
தானே உருவாக்கிய அந்த ‘விபத்தில்’ தனது மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து விட்டதாகக் கூறி 20 முதல் 60 ரிங்கிட் வரை அவன் பணம் கேட்டு தொல்லைக் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.
ஏமாற்று வேலை தொடர்பில் குற்றவியல் சட்டம் 420-வது பிரிவின் கீழ் அவன் தேடப்பட்டு வருவதாக ரஸ்லான் சொன்னார்.