ஈப்போ , டிச 27 – ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் 15வது ஆண்டாக அருணகிரிநாதர் விழா ஜனவரி 1ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ஈப்போ லகாட் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு அருணகிரிநாதர் விழாவின் சிறப்பு பிரமுகராக மலேசியா சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் பாலன் கலந்துக்கொள்வார்.
முதல் நாளன்று அதாவது டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு 60 மாணவிகள் பங்கேற்கும் முப்பெரும் தேவியர்கள் நாட்டிய நிகழ்வு , சமய சொற்பொழிவு உட்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை அமுதம் வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த வகுப்பில் சுமார் 100 மாணவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த அமுதம் வகுப்பை வர்த்தக பிரமுகர் கோவிந்தராஜ் தொடக்கி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகுப்பில் பொற்கிழிக் கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் அருணகிரிநாதர் மன்றத்தின் தலைவர் டாக்டர் வ. ஜெயபாலன் கூறினார்.