புத்ராஜெயா, பிப்ரவரி 19 – மலேசிய கடப்பிதழை பத்தாண்டுகள் வரை பயன்படுத்தும் பரிந்துரையை, குடிநுழைவுத் துறை ஆராய்கிறது. தற்சமயம், மலேசிய கடப்பிதழை ஐந்தாண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கபூர் உட்பட சில ஆசியான் நாடுகளில் பத்தாண்டுகள் வரையில் கடப்பிதழை பயன்படுத்தும் முறை வழக்கத்தில் உள்ளதோடு, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் அந்த பரிந்துரை ஆராயப்படுவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
கூடிய விரைவில் அந்த ஆய்வின் முடிவு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் சொன்னார். முன்னதாக, மலேசிய கடப்பிதழை பத்தாண்டுகள் வரை பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆராய வேண்டுமென, தீபகற்ப மலேசியாவின் குடிநுழைவு சேவை சங்கம் பரிந்துரையை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.