Latestஉலகம்

கணவருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் கும்பலால் கற்பழிப்பு

ஜார்கண்ட், மார்ச் 3 – கணவருடன் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் இந்தியா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண், குறைந்தது 7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கிந்திய மாநிலம் ஜார்கண்ட்டில் வெள்ளிக்கிழமை இரவு அச்சம்பவம் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் மேற்கு வங்கத்தில் இருந்து நேப்பாளம் செல்லும் வழியில், இரவில் Dumka எனும் ஊரில் சந்தைக்கு அருகில் ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரும் கூடாரம் போட்டுத் தங்கினர்.

அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் கும்பல் கூடாரத்தை உடைத்து, 30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணை மாறி மாறி கற்பழித்ததோடு, உடல் ரீதியான வன்முறையையும் பயன்படுத்தியது.

இரவு 11 மணி வாக்கில் அப்பக்கமாக வந்த ரோந்து போலீசாரை நிறுத்தி அவர்கள் தகவல் கொடுக்க, அப்பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்பெண் கொடுத்த தகல்களின் அடிப்படையில் சனிக்கிழமை அதிகாலையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 3 சந்தேக நபர்களைக் கைதுச் செய்தனர்.

அக்கும்பலைச் சேர்ந்த எஞ்சியவர்களை, சிறப்புப் படை அமைத்து போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

அச்சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள ஸ்பெயின் தூதரகம், உள்ளூர் அதிதாரிகளைத் தொடர்புக் கொண்டு தனது ஆழ்ந்த கவலையையும் கடும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 90 கற்பழிப்புச் சம்பவங்கள் பதிவாகியதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஒரு வித தயக்கம் மற்றும் போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லாதது போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டவர்கள் அதனை வெளியில் சொல்வதில்லை; இதனால் உண்மை எண்ணிக்கை அதை விட இன்னும் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!