கோலாலம்பூர், மார்ச் 11 – கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே ஒருவரது பிறப்பு பதிவுச் செய்யப்படும் வரை, குடியுரிமைக்கான வாய்ப்பு திறந்தே இருக்கும் என, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
கடந்தாண்டு முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள், குடியுரிமை பெறுவதில் இடையூறாக இருக்குமென, அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று முன் வைத்துள்ள விமர்ச்சனம் குறித்து சைபுடின் அவ்வாறு கருத்துரைத்தார்.
பிறப்பை முறையாக பதிவுச் செய்யாதவர்கள் மீது அரசாங்கம் கொண்டுள்ள அந்த தார்மீகக் கடப்பாடு குறித்து, கெஅடிலான் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீமூம் குரல் எழுப்பி இருந்தார்.
1957-ஆம் ஆண்டு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ், ஒரு குழந்தையின் பிறப்பு குறித்து அறிந்தவர்கள் உடனடியாக அதனை பதிவுச் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவுச் செய்யப்படும் தேதி, அந்த குழந்தையின் அதிகாரப்பூர்வ பிறந்த தேதியாக கருதப்படும்.
சட்டபூர்வமான குடியுரிமையை பெற, போலீஸ் அறிக்கை, மருத்துவமனை அறிக்கை மற்றும் சமூக நலத்துறையின் அறிக்கை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
எனினும், திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை, கைவிடப்பட்ட குழந்தைகள் உட்பட பல்வேறு சூழ்நிலைகளில் பிறக்கும் குழந்தைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் 15A பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம் என சைபுடின் தெளிவுப்படுத்தினார்.