ஜோகூர் பாரு, மார்ச் 11 – ஜோகூர் பாருவிலுள்ள, Southkey பேரங்காடியில், கர்ப்பிணி ஒருவர், பெண் வாடிக்கையாளர் ஒருவரால் முகத்தில் குத்தி தாக்கப்படும் காணொளி வைரலாகியுள்ளது.
அச்சம்பவம், கடந்த சனிக்கிழமை மாலை மணி 3.17 வாக்கில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பான, CCTV பதிவு ஒன்றை, பாதிக்கப்பட்ட 25 வயது பெண், ஜுரியானி மாமுட் எனும் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த, கட்டண முகப்பிற்கு சென்ற, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அங்கு பணியில் இருந்த ஜூரியானியிடம், தாம் கொண்டு வந்த பொருள் ஒன்றை கணக்கில் சேர்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.
எனினும், அதற்கு முன்னரே கணக்கில் சேர்க்கப்பட்ட அந்த பொருளை அகற்ற, பாதிக்கப்பட்ட பெண் சற்று நேரம் எடுத்துக் கொண்டதால், சினமடைந்த வாடிக்கையாளர் அவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பில் புகார் ஒன்றை பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரவுப் செலாமாட், விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சொன்னார்.