![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-04-Jul-2024-10-11-PM-1910.jpg)
மணிப்பூர், ஜூலை-4 இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்மீக சொற்பொழிவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட சாமியார் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுவதை அவரின் வழக்கறிஞர் மறுத்திருக்கிறார்.
போலீசாரின் கண்ணில் படாமல் மறைந்திருக்க வேண்டிய அவசியம் தனது கட்சிக்காரரான சாமியார் போலே பாபாவுக்கு (Bhole Baba) இல்லையென, வழக்கறிஞர் AP Singh கூறினார்.
கூட்ட நெரிசலில் பக்தர்கள் மிதியுண்டு பலியானதற்கு சாமியார் எப்படி பொறுப்பேற்க முடியுமென அவர் கேள்வியும் எழுப்பினார்.
ஆன்மீக சொற்பொழிவில் சில சமூக விரோதிகள் ஊடுருவியதே அச்சம்பவத்திற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது என்றும் AP Singh கூறிக் கொண்டார்.
போலே பாபா சட்டத்தை மதிப்பவர்; அதனால் போலீசை கண்டு அவர் பயந்தோட மாட்டார், நிச்சயம் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என AP Singh கூறினார்.
ஆனால், சாமியார் இப்போது எங்கு இருக்கிறார் என்ற தகவலை மட்டும் அவரின் வழக்கறிஞர் கூறவில்லை.
கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்ற ஆன்மீக சொற்பொழிவு முடிந்து திரும்பும் போது கூட்ட நெரிசலில் மிதிபட்டும், மூச்சுத் திணறியும் 121 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
வெறும் 80 ஆயிரம் பேருக்குப் மட்டுமே போலீசார் அனுமதி தந்திருந்த நிலையில், அதை விட 2 மடங்கு அதிகமானோர் அதில் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் போலீஸ் அதிகாரியுமான போலே பாப், கதவு கெட்டியாகப் பூட்டப்பட்ட கோயிலொன்றினுள் மறைந்திருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.