நியூ டெல்லி, பிப் 4 – 32 வயது பிரபல பாலிவுட் நடிகை மற்றும் சமூக ஊடகத்தில் அதிக செல்வாக்கு கொண்ட பூனம் பாண்டே முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மேலாளர் தெரிவித்திருந்ததை ஓட்டி சினிமா வட்டாரத்திலும் பொது மக்களிடமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் உயிரிழக்கவில்லை, நான் உயிருடன் தான் இருக்கிறேன்’ என நேற்று திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூனம் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘என்னை மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த உரையாடலை ஏற்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் நான் உயிரிழந்து விட்டதாகக் கூறினேன்.
உயிரை பறிக்கும் நோய் என்பதாலும், இந்த நோய்க்கு அவசர கவனம் தேவைப்படுவதாலும், என்னுடைய மரண செய்தி மூலம் இதற்கான கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தேன்’ என பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் மற்ற புற்றுநோய்களை போல் அல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிலுமாக குணப்படுத்த கூடியது என்றும் அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு இப்போது பூனம் பாண்டே, வீடியோ வெளியிட்டு இருப்பது பொது மக்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது.