சிரம்பான், பிப் 19 – போலீஸ், குடிநுழைவு மற்றும சிரம்பான் மாநகர் மன்ற அதிகாரிகள் சிரம்பான் நகரின் மையத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரிடம் பரிசோதனை நடத்தினர். நேற்று மாலை மணி 4.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் வார இறுதியில் வெளிநாட்டினர் கூடும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். 835 வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் 79 வெளிநாட்டுப் பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் வங்காளதேசம், நேப்பாளம் ,மியன்மார் மற்றும் இந்தோனேசியர்களாவர்.
அரசு பணியாளர்கள் தங்களது கடமையை செய்வதற்கு தடையாக இருந்த சில தனிப்பட்ட நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை குடிநுழைவு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக Mohamad Hatta செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்த உணவகங்கள் மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்களுக்கு எதிராக 13 குற்றப் பதிவுகள் விநியோகிக்கப்பட்டதாக சிம்பான் மாநாகர் மன்றத்தின் சட்டம் மற்றும் அமலாக்கத்தின் இயக்குனர் Hanizam Ahmad தெரிவித்தார்.