கோலாலம்பூர், டிசம்பர் 20 – செராசில், இம்மாத தொடக்கத்தில், தனியார் கிளினிக் ஒன்றின் மாருத்துவரை போல நடித்து ஏமாற்றிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் ஆடவனுக்கு, எட்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், 26 வயது சுஹைப் ஜலால் எனும் அவ்வாடவன், எட்டு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அவ்வாடவன், தனியார் கிளினிக் ஒன்றின் மருத்துவர் போல நடித்து, ஏமாற்றியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
டிசம்பர் முதலாம் தேதி, இரவு மணி ஒன்பது வாக்கில், செராஸ், தாமான் மலூரியிலுள்ள, தனியார் கிளினிக் ஒன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, அவனது செயல் அம்பலமானதோடு, விசாரணைக்காக அவன் 19 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.