கோலாலம்பூர், டிச 18 – ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீசாரின் கவனம் தற்போது பெட்டலிங் ஜெயா, டாமான்சாரா டாமாயிலுள்ள இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் புளொக் Rரில் உள்ள காலி வீடுகளின் பக்கம் திரும்பியுள்ளது.
நேற்று புளொக் R அடுக்ககத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள் அங்குள்ள காலி வீடுகளில் புகுந்து விசாரணையை நடத்தியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது. இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
புளோக் R-ரில் 40 யூனிட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3ஆவது மற்றும் 4வது மாடிகளில் உள்ள காலி வீடுகளில் தேடும் நடவடிக்கையில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டனர்.
போலீசார் மேற்கொண்ட 11 நாள் விசாரணையின்போது இடாமான் அடுக்கு மாடி பகுதியில் ஜெய்ன் ரய்யானின் பெற்றோர் உட்பட அங்கு வசிக்கும் 172 தனிப்பட்ட நபர்களிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யான் , தனது பெற்றோருடன் வசித்து வந்த இடாமான் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடைக்கு அருகே அவனது சடலம் டிசம்பர் 6ஆம் தேதி இரவு 10 மணியளவில் மீட்கப்பட்டது.
அந்த சிறுவன் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கான அடையாளம் அவனது உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனை மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் கொலைக் குற்றத்திற்கான 302ஆவது விதியின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.