ஜோகூர் பாரு , ஜன 29 – 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பலின் மூளையாகச் சந்தேகிக்கப்படுபவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் ஜோகூர் மற்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கையை சேர்ந்த போலீஸ் குழுவினர் அந்த சந்தேக நபர்களை கைது செய்ததாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.
அந்த கும்பல் ஜூன் முதல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது. படகு ஓட்டுநர்களின் உதவியுடன் கடல் வழியாக போதைப் பொருட்களை அண்டை நாட்டிற்கு அக்கும்பல் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. ஜோகூர் பாரு, பினாங்கு பெர்மாடாங் பாவ், மூவார், பகாங் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனைகளில் உள்நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டனர். இக்கும்பலிடமிருந்து 2.735 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு, கெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளுடன் 12 மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள் ,ரொக்கம் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக கமிஷனர் குமார் விவரித்தார்.