கோலாலம்பூர், ஏப்ரல் 25 – நேற்று பெட்டாலிங் ஜெயாவில் 2008 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மித்ராவின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் நூல் வெளியீடு கண்டது.
கடந்த 2008ஆம் ஆண்டில் செடிக் என ஆரம்பிக்கப்பட்டு தற்போது மித்ராவாக மாற்றம் கண்டுள்ளது வரை அது கடந்து வந்த வரலாற்று சுவடுகளையும், சவால்களையும் இப்புத்தகத்தில் ஆய்வாளர் டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூர்யா எழுதியுள்ளார்.
மித்ரா உருவாக்கப்பட்ட நோக்கம், இந்திய சமூகத்தின் எதிர்ப்பார்ப்பு, மித்ரா-வில் ஏற்பட்ட பின்னடைவுகள், ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற மித்ரா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் என பல்வேறு அம்சங்களும் பரிந்துரைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
மித்ரா தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டுமே அதன் சிறப்பு செயற்குழுவின் தலைவராக இருந்த டத்தோ ரமணனின் கீழ் அதற்கு ஒதுக்கப்பட்ட 100மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சமயத்தில்தான் ஊழல் தடுப்பு ஆணையமும் ஊழலுக்கான வாய்ப்பு குறைவு எனும் மதிப்பீட்டையும் வழங்கி இருந்தது.
ஆனால் திடீரென மித்ரா ஒற்றுமை அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டது.
பல்வேறு கோரிக்கைக்குப் பிறகு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு திரும்புவதாக அறிவித்தார்.
இவ்வாறு மித்ரா பற்றிய பல்வேறு
தகவல்களையும் பதிவுகளையும் கொண்டுள்ள இப்புத்தகத்தின் அதிகாரப்பூர்வமான திறப்பு விழாவில் பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.