தவாவ், ஏப்ரல் 19 – சபா, தவாவ், ஜாலான் T2 சாலையில் அமைந்துள்ள, அனைத்துலக காப்பி உரிம வாணிப உணவகமான ஸ்டார்பக்ஸ் வளாகம், இன்று காலை “ஸ்ப்ரே” சாயம் அடித்து நாசப்படுத்தப்பட்டிருந்தது.
காலை மணி 8.30 வாக்கில், அந்த உணகவகத்தின் மேற்பார்வையாளரால் அந்த சதிநாச செயல் முதலில் அடையாளம் காணப்பட்ட வேளை ; பின்னர் உணவக நிர்வாகம் அது குறித்து போலீஸ் புகார் செய்தது.
நண்பகல் மணி 12.30 வாக்கில், அச்சம்பவம் தொடர்பில், போலீஸ் புகார் ஒன்றை பெற்றதை, தவாவ் போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிடெண்டன் சாம்பின் பியூ உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவின் வாயிலாக, இரு ஆடவர்கள் அந்த சதிநாச செயலை புரிந்தது தெரிய வந்துள்ளது. எனினும், அவர்களின் முகம் தெளிவாக இல்லை என சாம்பின் பியூ கூறியுள்ளார்.
எனினும், அவ்விரு ஆடவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது என்றாரவர்.
அதே சமயம், டி2 கட்டட நிர்வாகம், ஸ்டார்பக்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து, அந்த கிறுக்கல்களை உடனடியாக அகற்றியுள்ளது.
வணிக வளாகங்களின் சுவர்களை சேதப்படுத்துவது உட்பட பொதுமக்கள் அல்லது எந்தவொரு தனிநபரையும் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று சாம்பின் பியூ எச்சரித்துள்ளார்.