Latestமலேசியா

23-வது மாடியிலிருந்து காதலியை கீழே தள்ளி கொலை செய்த லோரி ஓட்டுனர் ; மனநல பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு

ஷா ஆலாம், ஏப்ரல் 19 – சிலாங்கூர், செத்தியா ஆலாமிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 23-வது மாடியிலிருந்து, தனது காதலியை கீழே தள்ளிவிட்டு கொன்றதாக நம்பப்படும் லோரி ஓட்டுனரை, பேராக், உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையில், மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி, ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

37 வயது வி.நாதன் எனும் அவ்வாடவனின் வழக்கறிஞரான ஆர். சிவானந்தன் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, மாஜிஸ்திரேட் அந்த உத்தரவை பிறப்பித்தார்.

விசாரணையின் போது, நாதன் உத்தரவுகளை புரிந்து கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினார். 2018-ஆம் ஆண்டு, மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய அவருக்கு, மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. அதன் தாக்கத்தால், வழக்கு விசாரணையை அவரால் எதிர்கொள்ள முடியாமல் போகலாம் என சிவானந்தன் கூறியிருந்தார்.

அவரது அந்த வாதத்திற்கு, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காததால், நாதனை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

முன்னதாக, பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு மணி 10.02 வாக்கில், செத்தியா ஆலாமிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23-வது மாடியிலிருந்து, 32 வயது மாவிகா லுமையாய் எனும் தாய்லாந்து பெண்ணை கீழே தள்ளிக் கொன்றதாக நாதனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோடு, 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!