கோலாலம்பூர், ஏப்ரல்-19, சாதாரண உடையில் இருக்கும் JPJ அதிகாரிகளுடன் விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது.
அச்சம்பவம், KL- Seremban நெடுஞ்சாலையின் நீலாய் அருகே செவ்வாய்க்கிழமை நண்பகல் வாக்கில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
காணொலி, புகைப்படங்கள் தவிர்த்து பேருந்து ஓட்டுநர் செய்த போலீஸ் புகாரின் நகலும் வைரலாகியுள்ளது.
சம்பவத்தின் போது ஜொகூர் மூவாரில் இருந்து TBS பேருந்து முனையத்தை நோக்கி அப்பேருந்து வந்துக் கொண்டிருந்தது.
SUV வாகனத்தில் வந்திறங்கிய மூவர் பேருந்தை நிறுத்தச் சொல்லி, தாங்கள் மாறுவேடத்தில் இருக்கும் JPJ அதிகாரிகள் என்றும் சோதனைச் செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறினர்.
ஆனால், அவர்கள் சீருடையில் இல்லாததால் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாக 51 வயது ஓட்டுநர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது JPJ-வின் Vest மேலங்கியையாவது அவர்கள் அணிந்திருக்க வேண்டும்; அதோடு JPJ அதிகாரிகள் என்பதற்கான அமுலாக்க அதிகார அட்டையையும் அவர்கள் காட்டவில்லை.
ஆனால் ஏதோ குண்டர் கும்பல் உறுப்பினர்கள் போல் அம்மூவரும் நடந்துக் கொண்டதால் தாம் சத்தம் போட்டதாக பேருந்து ஓட்டுநர் சொன்னார்.
அம்மூன்று பேரது நடவடிக்கையினால் பேருந்து ஓட்டுநர் அதிருப்தியில் வாக்குவாதம் செய்வது வைரலாகியுள்ள 2 காணொலிகளில் தெரிகிறது.
இவ்வேளையில் அச்சம்பவம் நீலாயில் நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்திய நெகிரி செம்பிலான் JPJ, அது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என உத்தரவாதம் அளித்தது.