
கோலாலம்பூர், ஆகஸ்ட்.13- தாபூங் ஹாஜி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஸ் கட்சி ஒரு மாபெரும் வீதி ஆர்ப்பாட்டத்தை நடத்துமா என ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கலந்து கொள்ளாததால், தாபூங் ஹாஜி மீதான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தைத் தொடர மறுத்து, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனை அடுத்து DAP நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர் அவ்வினாவைத் தொடுத்துள்ளார்.
பாஸ் கட்சி உண்மையிலேயே இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் ஆதரிப்பதாக இருந்தால், ஆகஸ்ட் 11 ஆம் தேதி விவாதத்தில் பங்கேற்காமல் ஏன் அனைத்து பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்? தாபூங் ஹாஜி நிதியை முறைகேடாகக் கையாண்டது யார் என்பது இப்போது தெரிந்து விட்ட நிலையில், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஸ் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யுமா? என அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் தொடங்கும் முன், பிரதமரின் உத்தரவின் பேரில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதால், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வருகை மிக முக்கியம் எனவும் மருத்துவ சிகிச்சைக்குப் பின் அன்வார் பணிக்குத் திரும்பும் வரை அச்சிறப்புக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரியும் Perikatan Nasional கட்சியின் தலைமை கொறடா Takiyuddin Hassan கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும், விவாதத்தைத் தொடர மக்களவை சபாநாயகர் Johari Abdul உத்தரவிட்டார். அதனை அடுத்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நிலவரத்தில், பாஸ் கட்சியின் நடவடிக்கைகள் அம்னோவுடன் அரசியல் உறவுகள் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறிய ராயர், அக்கட்சியின் உண்மையான நோக்கம் என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.



