![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-23-May-2024-06-01-PM-1280.jpg)
ஷா ஆலாம், மே 23 – கோலா குபு பாரு இடைத் தேர்தல் பரப்புரையின் போது, வாகனத்தின் பேரரசரின் புகைப்படத்தை நபர் ஒருவர் காட்சிக்கு வைத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென, கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டுமென கோரி, 66 வயது இராமசாமி செய்திருந்த மனுவை செவிமடுத்த நீதித்துறை ஆணையர் டாக்டர் வெண்டி ஓய் சு கீ அந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னதாக, இராமசாமி குற்றத்தை ஒப்புக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கு அந்த குற்றச்சாட்டு புரியவில்லை என்பதோடு, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அவர் அறிந்திருக்கவில்லை என வெண்டி தெரிவித்தார்.
அதற்கான சாற்று, சீராய்வு மனுவில், பேரரசரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதை தாம் உணர்ந்திருக்கவில்லை என இராமசாமி குறிப்பிட்டுள்ளது தான் என வெண்டி சொன்னார்.
அதனால், இராமசாமியின் ஒப்புல் வால்குமூலத்தை கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், அந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக, கோலா குபு பாரு இடைத்தேர்தல் பரப்புரையின் போது, வாகனத்தில் பேரரசரின் புகைப்படத்தை காட்சிக்கு வைத்த குற்றச்சாட்டை, இம்மாதம் ஆறாம் தேதி, இராமசாமி ஒப்புக் கொண்டார்.
மே நான்காம் தேதி, மாலை மணி 5.40 வாக்கில், கோலா குபு பாரு இடைத்தேர்தல் பரப்புரையின் போது, நான்கு சக்கர வாகனம் ஒன்றில் அவர் பேரரசரின் படத்தை காட்சிக்கு வைத்ததாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.