
நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டங் கட்டமாக மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை, மொத்தம் 1,061 பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் ‘நிலை 7’ என பழுதடைந்த அல்லது சிதிலமடைந்த கட்டிடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவ்வெண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் கூறினார்.
நாடளாவிய அளவில் மாணவர்களுக்கும் பள்ளித் தரப்பினருக்கும் பாதுகாப்பான மற்றும் உகந்த கல்வி உள்கட்டமைப்பை வழங்குவதில் கல்வி அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது என கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக Fadhlina Sidek அவ்வாறு பதிலளித்திருந்தார்.
நிலை 7-இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றுப் பள்ளி கட்டிடங்களைக் கட்டுவதற்கான அவசியத்தையும் அதன் சாத்தியக்கூறுகளையும் மாநில கல்வித் துறைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றன. அது சம்பந்தப்பட்டத் தரப்பின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



