கோலாலம்பூர், ஜன 7 – தான் லஞ்சம் பெற்றுள்ளதாக பெர்சத்து கட்சியின் உறுப்பினர் பாட்ருல் இஸாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் . அதோடு இந்த அவதூறு குறித்து தான் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆக்கப்பூர்வமான் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அவை அவதூறாக இருக்கக்கூடாது என, பினாங்கு செபராங் ஜெயா போலிஸ் நிலையம், தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் அளித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவல்களை அவர் வெளியிட்டார்.
முன்னதாக பட்ருல் தனது பதிவில், பிரதமரின் மூத்த அரசியல் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து தகவல்களைத் திரட்டி வருவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.அதில் சம்சுல் தனது பினாமிகளைப் பயன்படுத்தி அரசு சாரா இயக்கத்திற்கான நிதிகளை தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும், நாளை ஜனவரி 8ஆம் திகதி ஆதாரத்தை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய சம்சுல், அவதூறை மட்டும் பரப்பாமல் ஆதாரத்தையும் காண்பிக்குமாறு பதிலளித்துள்ளார்.