ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 18 – சுங்கை பெராய் ஆற்றின் அடிமட்டத்தில் பொறுத்தப்பட்டிருக்கும், 1.35 மீட்டர் தடிமன் கொண்ட தண்ணீர் குழாய் வெடித்ததால், பினாங்கில் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, பினாங்கு நீர் விநியோக நிறுவனம் தெரிவித்தது.
அந்த தண்ணீர் விநியோக குழாய் வெடித்ததற்கான காரணத்தை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது சொன்னது.
அந்த வெடிப்பால், செபராங் பெராய் உத்தாரா மாவட்டத்திலுள்ள, அம்பாங் ஜாஜார், பட்டர்வொர்த், சுங்கை டுவா உட்பட பினாங்கு தீவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மாவட்டத்தில் சில பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படக்கூடுமென அந்நிறுவனம் தெரிவித்தது.
அதனால், சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள, பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர் விநியோகத்தை சீர் செய்வது மீதான மிக அண்மைய தகவல்கள் அவ்வப்போது தொடர்ந்து வெளியிடப்படுமென கூறிய பினாங்கு நீர் விநியோக நிறுவனம், தடைக்கு வருந்துவதாகவும் தெரிவித்தது.