ஜெலுபு , பிப் 25 – நோன்பு பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா மற்றும் சரவாவிற்கான சிக்கன வகுப்பிற்கான ஒரு வழி விமான டிக்கெட்டுகள் கூடியபட்சம் RM 599 ரிங்கிட்டிற்கு கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு உதவியாக அரசாங்கத்தின் இந்த முயற்சி அமைந்துள்ளது.
சீனப் புத்தாண்டு, நோன்பு பெருநாள், காவாய் , காமாதன், அல்லது கிறிஸ்துமஸ் ஆகிய அனைத்து பெருநாட்களுக்கான கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம் என அந்தோனி லோக் கூறினார். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கூடியபட்ச விமான டிக்கெட் விலைகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
எனினும் தீபகற்ப மலேசியாவில் பஸ்கள் மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் கிடைப்பதால் கூடியபட்ச விலை நிர்ணயிக்கப்படவில்லை. அதே வேளையில் முன்கூட்டியே விமான டிக்கெட்டுகளை வாங்குவோர் குறைந்த விலையில் வாங்க முடியும். பற்றாக்குறை காரணமாக டிக்கெட் விலை அதிகரித்தாலும் RM 599 ரிங்கிட்டிற்கு மேல் விமான டிக்கெட் விலை அதிகரிக்காது என புதிய பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் அந்தோனி லோக் தெரிவித்தார்.