கோலாலம்பூர், மார்ச் 31 – KK Mart சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக புறக்கணிப்புப் போராட்டத்தை ஏவி விடுவோர், நிலைமைக் கை மீறினால் அதன் விளைவுகளைச் சந்தித்தாக வேண்டும்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் அவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புறக்கணிப்புப் போராட்டம் என்பது சட்டப்படி குற்றமல்ல; ஆனால் அதுவே எல்லை மீறி, KK Mart கடைகளில் அத்துமீறல் செய்வது, கடைகளை எரிப்பது போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும் என அமைச்சர் நினைவுறுத்தினார்.
எனவே, KK Mart கடைகளைப் புறக்கணிக்குமாறு பொது மக்களை ஏவி விடுவோர் அச்செயல்களை நிறுத்திக் கொண்டு பதற்றத்தைக் குறைக்க உதவ வேண்டும் என சைஃபுடின் கேட்டுக் கொண்டார்.
KK Mart கிளைக் கடைகளை உட்படுத்திய இரண்டாவது சம்பவமாக, பஹாங் குவாந்தானில் உள்ள KK Mart-டில் சனிக்கிழமை காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
Allah என்ற வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சர்ச்சை வெடித்த பிறகு கடந்த வாரம் பேராக் பீடோரில் KK Mart கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது; நல்ல வேளையாக அது வெடிக்கவில்லை.
இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது; சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டும் விட்டது.
எனவே இனி சட்டம் தன் கடமையைச் செய்ய நாம் வழி விட வேண்டும்.
அதை விடுத்து, சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஏவி விட்டு யாரும் குளிர்காயக் கூடாது என்றும் அமைச்சர் நினைவுறுத்தினார்.
இந்த காலுறை சர்ச்சை வெடித்தது முதல் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலே KK Mart-டுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தை விடாப்பிடியாகத் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.