ஜொகூர் பாரு, மார்ச் 31 – மலேசியா நாளொன்றுக்கு மூவாயிரம் இணையத் தாக்குல்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வலுவான நிலைப்பாட்டை எடுத்தது முதல் நாட்டின் தற்காப்புத் துறை அளவற்ற வகையில் அத்தாக்குதல்களைச் சந்தித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
பல்வேறு தரப்புகள் மேற்கொண்டு வரும் அத்தாக்குல்கள், காசா நெருக்கடி தொடர்பான மலேசியாவின் நகர்வை உளவுப் பார்ப்பதோடு, நாட்டின் தற்காப்பு அமைப்பு முறையையும் ஊடுருவ பார்ப்பதாக அவர் சொன்னார்.
என்றாலும் அவர்கள் யார் என்பதைத் தெரிவிக்கத் தேவையில்லை என்றார் அவர்.
இவ்வேளையில், இஸ்ரேலிய ஆடவன் 6 கைத்துப்பாக்கிகளுடன் கோலாலம்பூரில் கைதாகியிருக்கும் விஷயத்தில், போலீஸ் கேட்டுக் கொண்டால் தற்காப்பு அமைச்சு உரிய ஒத்துழைப்பை வழங்கும்.
உள்நாட்டு பாதுகாப்பு போலீசின் கீழ் வருவதால், அவ்விவகாரத்தை கையாள்வதை அதனிடமே விட்டு விடுவதாக காலிட் நோர்டின் சொன்னார்.
ஆனாலும், தற்காப்பு அமைச்சு அளவில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் என அமைச்சர் கூறினார்.