நிபோங் தெபால், ஜனவரி 31 – பினாங்கில், பள்ளி மாணவி ஒருவரை தாக்கி, கடித்து தொந்தரவு விளைவித்த நாயின் உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்படும்.
அச்சம்பவம் நிகழ்ந்த, சிம்பாங் அம்பாட், தாமான் பெகாட்ரா இண்டாவிலுள்ள, வீடொன்றில், விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, செபராங் பெராய் ஊராட்சி மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
தொடக்க கட்ட விசாரணையில், மாணவியை தாக்கியதாக கூறப்படும் நாயை, அதன் உரிமையாளர் பட்டர்வொர்த்திலுள்ள, விலங்குகள் காப்பகம் ஒன்றிற்கு இடமாற்றம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
எனினும், அந்த நாய் தற்போது இருக்கும் இடம் உட்பட அச்சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களை திரட்ட, விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக, செபராங் பெராய் ஊராட்சி மன்றம் தெரிவித்தது.
அதே சமயம், தொந்தரவு விளைவித்த குற்றத்திற்காக, ஊராட்சி மன்ற சட்டத்தின் கீழ், அந்நாயின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், நாய் கடிக்கு இலக்கான மாணவியை, உடனடியாக அருகிலுள்ள, சிகிச்சை மையம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக நம்பப்படும் இரு மாணவிகளை, வீடொன்றிலிருந்து திடீரென வெளியே ஓடி வரும் நாய் ஒன்று, தாக்கி கடிக்கும், இரண்டு நிமிட CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.
நேற்று காலை மணி 7.28 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்த வேளை ; அந்நாயை கட்டுப்படுத்த அதன் உரிமையாளர் போராடும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.