புத்ராஜெயா, ஏப்ரல் 22 – மடானி பொருளாதார கொள்கைக்கு ஏற்ப, தேசிய வளர்ச்சி மற்றும் பொருளாதார பின்னடைவு தொடர்பான ஆலோசக சேவைகளை வழங்க ஏதுவாக, PMAC எனப்படும் கொள்கை ஆலோசக செயற்குழுவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தோற்றுவித்துள்ளார்.
அந்த செயற்குழுவிற்கு, டான் ஸ்ரீ முஹமட் ஹாசன் மரிக்கன் தலைமையேற்கவுள்ள வேளை ; டத்தோ அஹ்மாட் புவாட் மாட் அலி, பேராசிரியர் டாக்டர் ஆம் கிம் லெங் மற்றும் டாக்டர் நுங்சாரி அஹ்மாட் ரதி ஆகியோர் அதில் இடம்பெற்றிருப்பார்கள் என பிரதமர் துறை அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்துடன், நிதி அமைச்சருக்கான ACFIN ஆலோசனை செயற்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அப்புதிய செயற்குழு தோற்றம் கண்டுள்ளது.
முன்னதாக, ACFIN செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் உரிய பரிசீலனையைப் பெற்றன. அவற்றில் சில தற்சமயம் செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள, பிரதமரின் PMAC கொள்கை ஆலோசக செயற்குழு, அரசாங்கத்திடமிருந்து எந்த ஊதியத்தையும் பெறாது எனவும் கூறப்படுகிறது.