கோலாலம்பூர், டிச 19 – பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு AIDS நோய் இருப்பதாக காணொளி வெளியிட்டது தொடர்பாக வலைப் பதிவாளர் பாப்பாகோமோ எனப்படும் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ்ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் துணைத் தலைவர் ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
“DSAI penyakit Misteri Tiada Penawar Aids” அதாவது அன்வாருக்கு AIDS இருக்கிறது, அதற்கு மருந்தில்லை என்ற தலைப்பில் பாப்பாகோமோ வெளியிட்ட காணொளி பிரதமருக்கு அவதூறு ஏற்படுத்தியிருப்பதாக ருஸ்டி முகமது இசா தெரிவித்ததாக ஆங்கில செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறு குற்றச் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் அவமதிப்பு நடத்தைக்காகவும், குற்றவியல் சட்டத்தின் 504-வது பிரிவின் கீழ் அமைதியை மீறும் நோக்கத்துடன் செயல்பட்டதற்காகவும், இணைய முறைகேடுகளை தண்டிக்கும் தகவல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் பாப்பாகோமோ விசாரிக்கப்பட்டு வருவதாக ருஸ்டி முகமது இசா கூறினார்.