பத்து பஹாட், பிப்ரவரி 21 – ஜொகூர் பத்து பஹாட்டில் பதின்ம வயது பெண் பிள்ளையைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அதனை வீடியோவில் பதிவுச் செய்ததாக புல் வெட்டும் தொழிலாளியான மாற்றான் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் அவ்விரண்டு குற்றச்சாட்டுகளையும் 41 வயது அந்நபர் மறுத்து விசாரணைக் கோரினார்.
கடந்தாண்டு ஜூனில் பத்து பகாட், ஸ்ரீ காடிங்கில் உள்ள வீட்டில் வைத்து 15 வயது அப்பிள்ளையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவ்வாடவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அக்குற்றத்திற்கு, குற்றவியல் சட்டம் 376-வது பிரிவின் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறையும், இருபதுக்கும் குறையாத பிரம்படிகளையும் விதிக்க முடியும்.
அதே வீட்டில் வைத்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டாவது குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்கினார்.
அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2017 சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
அப்பிள்ளையின் தாய் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவ்வாடவர் ‘அந்த வேலையைப்’ பார்த்து வந்திருக்கிறார்; அதோடு, கூச்சமோ மனசாட்சியோ இல்லாமல் அதனை கைப்பேசியில் அவர் பதிவுச் செய்து வைத்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அம்மாணவியின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் காணப்பட்டதை அடுத்து, ஆசிரியர் சந்தேகத்தில் அழைத்து கேட்ட போது தான், அவர் உண்மையைக் கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவருக்கு பிரச்னை வரலாம் எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் தரக்கூடாது என அரசு தரப்பு வாதிட்டதை அடுத்து, அவரை வெளியில் விடுவதில்லை என நீதிபதி அறிவித்தார்.
மார்ச் 25-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.