புத்ரா ஜெயா, நவ 26 – பி.கே.ஆர் தலைவர்கள் மலாய்க்காரர்களாக இருந்தாலும் இதர சமூகங்கள் ஒதுக்கப்படமாட்டார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அனைத்து இனங்களும் இந்நாட்டில் தாங்களும் ஒரு பகுதியினர் என்ற உணர்வை பெறவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மலாய்க்காரர்கள் அல்லாத விவகாரங்கள் தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் கட்சியின் தலைமைத்துவம் அதில் கவனம் செலுத்தி நியாயமான நடவடிக்கை எடுக்கும் என பி.கே.ஆர் தலைவருமான அன்வார் தெரிவித்தார். மற்ற இனங்களின் பிரச்சனைகள் கையாளப்படவில்லை என்ற கவலைகள் சில தரப்பிடம் உள்ளன.
இன்னும் சிலர் மலாய்-முஸ்லிம்கள் நலன்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களுக்கு நாங்கள் நியாயமாக இருக்கிறோம் என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லையென புத்ரா அனைத்துலக மாநாட்டு மையத்தில் பி.கே.ஆர் கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.
மற்ற இனங்களின் கருத்துக்களும் மதிப்பளிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் நம்பிக்கையை கொள்ளாவிட்டால் இந்த தேசம் ‘பாதுகாப்பாக’ இருக்காது” என்றும் அவர் கூறினார்.