
புத்ராஜெயாவில், ஆடம்பர அழகு நிலையத்திற்குத் தன் கணவருடன் சென்ற பெண் ஒருவருக்கு விரும்பத்தகாத அனுபவம் ஏற்பட்டுள்ளது. தமது கணவருடன் அப்பெண் வாசனைத் திரவியங்களைப் பார்க்கச் சென்றுள்ளார்.
வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த போது, அப்பெண்ணின் கணவர் ஒரு வாசனைத் திரவியப் பாட்டிலைச் சோதித்துப் பார்த்த பிறகு மீண்டும் அலமாரியில் வைத்திருக்கிறார். எனினும் எதிர்பாராத விதமாக வாசனைத் திரவியத்தின் பின்னால் வைக்கப்பட்டிருந்த மற்றொரு வாசனைத் திரவியப் பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது.
அது தவறுதலாக நிகழ்ந்த ஒன்று. அதற்காக ஆச்சரியப்படும் விதமாக, வாசனைத் திரவியத்தின் ஒரு மாதிரி பாட்டிலை உடைத்ததற்காக, 1,080 ரிங்கிட் இழப்பீடு செலுத்தும்படி தாங்கள் கேட்டுக் கொள்ள்பட்டதாக அப்பெண் Threads தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் தமது அந்த அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் அப்பதிவு குறித்து பலர் கருத்துரைத்துள்ளனர். “உடைந்தால், விற்கப்பட்டதாகக் கருதப்படும்” கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அத்தகையதொரு விஷயம் உண்மையில் எந்தவோர் எழுத்துப்பூர்வ சட்டத்திலும் இடம் பெறவில்லை என சட்ட ஆலோசக நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் உடைத்த ஒரு பொருளை வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், அவர்களின் கவனக்குறைவால் சேதம் ஏற்பட்டிருந்தால், அவர்கள் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கலாம்.
ஆனால், வாடிக்கையாளர் அந்தப் பொருளை வாங்கி விட்டார் எனக் கருதி, அதன் முழு சில்லறை விலையையும் வசூலிக்க முடியாது. அதில் பல சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் விளக்கியது.



