ஈப்போ, மார்ச் 1 – பேராக், ஈப்போ, பெர்சாம், தாமான் உத்தாமாவிலுள்ள, வீடொன்றின் முன்புறம், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்த சம்பவத்தில், உடல் முழுவதும் தீப்புண் காயங்களுடன் மீட்கப்பட்ட ஜோடியில் ஒருவர் உயிரிழந்தார்.
அச்சம்பவத்தில், உடல் 90 விழுக்காடு வெந்த நிலையில் மீட்கப்பட்ட 90 64 வயது முதியவர், நேற்று மாலை மணி 6.52 வாக்கில் உயிரிழந்ததை, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் உறுதிப்படுத்தினார்.
அவருடன் அவ்விபத்தில் சிக்கி 70 விழுக்காடு தீப்புண் காயங்களுக்கு இலக்கான 54 வயது பெண், இன்னும் சுயநினைவு திரும்பாத நிலையில் ராஜா பெர்மைசூரி மைனுன் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது நிலை சீராக உள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், இதுவரை சம்பந்தப்பட்ட நபரின் பெண் பிள்ளை உட்பட நால்வரின் வாக்குமூலங்களை போலீஸ் பதிவுச் செய்துள்ளது.
தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு சுய நினைவு திரும்பியவுடன், அவரது வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படுமென யுஸ்ரி சொன்னார்.
முன்னதாக, அச்சம்பவத்தை போலீஸ் கொலை முயற்சியாக வகைப்படுத்தியுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சம்பவத்துக்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கேட்டதாக, சாட்சியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.