பொந்தியான், ஏப்ரல் 15 – ஜோகூர், பெக்கான் நானாஸிலுள்ள, பல்நோக்கு கடை ஒன்றில், நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில், பெண் பணியாளர் ஒருவர், தனது கழுத்தில் நீண்ட அரிவாள் வைத்து மிரட்டப்பட்டதால், பதற்றமான தருணத்தை எதிர்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை, அதிகாலை மணி 4.50 வாக்கில் அந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக, பொந்தியான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் அப்துல் ஹமிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
கடையில் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த ஆடவன் ஒருவன், சுமார் 45 சென்டிமீட்டர் நீளமுள்ள பாராங்க் கத்தியை கழுத்தில் வைத்து, தனித்திருந்த 20 வயது மதிக்கத்தக்க அந்த பெண் பணியாளரிடமிருந்து ஈராயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பணம் மற்றும் வளையலுடன், காரில் காத்திருந்த மற்றொரு நபருடன் கம்பி நீட்டியதாக கூறப்படுகிறது.
170 செண்டிமீட்டர் உயரத்தில், அடர் நீலம் மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட்டுகளை அணிந்திருந்த, உள்வாட்டவர்கள் என நம்பப்படும் அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.