
கோலாலம்பூர், ஏப்ரல்-22-நள்ளிரவில் உதவிய சாலையோர மெக்கானிக் ‘Abang Usop’, மீண்டும் ஒருமுறை பணத்தை மறுத்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ள சம்பவம், மலேசியர்களின் மனங்களை உருக்கியுள்ளது.
அண்மையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்ற Dicky Yau என்ற தனித்து வாழும் தந்தைக்கு Abang Usop உதவினார்.
Yau-வின் e-wallet-டில் குறைந்த பணமே இருந்ததைக் கண்டு, அவர் பழுது பார்த்ததற்கான கட்டணத்தை வாங்க மறுத்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து Yau-வுக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை கிடைத்தது.
அதில் 3,000 ரிங்கிட்டை மெக்கானிக்கிற்கு கொடுக்க Yau முயன்றார்.
ஆனால், “உங்களுக்கு பள்ளி செல்லும் குழந்தை உள்ளது, அவசியத்திற்குப் பயன்படுத்துங்கள். எனக்கு எதுவும் வேண்டாம்,” எனக் கூறி Abang Usop மீண்டும் பணத்தை மறுத்துவிட்டார்.
இந்த உருக்கமான சந்திப்பு தற்போது இணையத்தில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
பிரதிபலன் எதிர்பார்க்காத உண்மையான மனிதநேயம் இன்றும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று என வலைத்தளவாசிகள் நெகிழ்கின்றனர்…



