கோலாலம்பூர், ஏப் 19 – Nube எனப்படும் தேசிய வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தின் ஐந்து கிளைகள் மனித வளத்துறை அமைச்சர் Steven Sim மிற்கு எதிராக நேற்று போலீஸில் புகார் செய்துள்ளன. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சருக்கு எதிராக இந்த புகார் செய்யப்பட்டுள்ளதாக Nube வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான பண்டிகை உதவித்தொகையை வழங்குவது தொடர்பாக Nube யின் தேசிய நிர்வாகக் குழுவுக்குத் தெரியாமல், MCBA எனப்படும் மலேசிய வணிக வங்கிகள் சங்கத்துடன் ரகசியமாக விவாதித்ததாக Steven Sim மீது அந்த தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி,மலேசிய வணிக வங்கிகள் சங்கத்துடன் தேசிய வங்கி ஊழியர் தொழிற்சங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மலேசிய வணிக வங்கிகள் சங்கம் அதன் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பண்டிகை உதவியாக ஒரு மாத சம்பளத்தை வழங்குவதே அந்த புரிந்துணர்வு உடன்பாடு ஆகும் என Nube யின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.