
வாஷிங்டன், மே-21-மலேசியாவுடனான 147 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடற்படை ஏவுகணை ஒப்பந்தத்தை நோர்வே இரத்துச் செய்ததில், தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
மலேசியாவின் புதியக் கடற்படைக் கப்பல்களுக்காக வாங்கவிருந்த Naval Strike Missile திட்டத்தை நோர்வே திடீரென இரத்துச் செய்தது அனைத்துலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏவுகணையின் வழிகாட்டி முறையில் பயன்படுத்தப்படும் அமெரிக்கத் தயாரிப்பு பாகங்களுக்கு வாஷிங்டன் தடை விதித்ததே இந்த இரத்துக்குக் காரணம் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், அமெரிக்கா இதனை மறுத்துள்ளதோடு, நேட்டோ கூட்டணிகளுக்கு மட்டுமே அதிநவீன ஆயுதங்களை வழங்குவது என்ற தங்களின் புதியக் கொள்கை முடிவின்படியே இந்த இரத்து நடவடிக்கை என நோர்வே விளக்கமளித்துள்ளது.
நோர்வேயின் இந்த திடீர் முடிவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஏற்கனவே ஒப்பந்தத் தொகையில் 95 விழுக்காட்டைச் செலுத்தியுள்ள மலேசியா, கப்பல்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான செலவுகளையும் சேர்த்து, நோர்வேயிடமிருந்து 251 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஒப்பந்த முறிவு, ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை முழுமையாகப் பாதிக்கும் என புத்ராஜெயா எச்சரித்துள்ளது.



