![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-26-Nov-2023-10-34-PM-3474.jpg)
கோலாலம்பூர், நவ 27 – மஹிமா எனும் மலேசிய இந்து பேரவை ஏற்பாட்டில் நாட்டிலுள்ள 123 ஆலயங்களுக்கு 6 லட்சத்து 25,000 ரிங்கிட் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்பட்டது.
நேற்று பத்துமலையில் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மஹிமாவின் தலைவரும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவருமான டான்ஸ்ரீ ஆர்.நடராஜா இந்த காசோலைகளை எடுத்து வழங்கினார்.
இந்த நிதியுதவியை பெரும் முயற்சி எடுத்து, மஹிமாவின் மூலம் கோவில்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருங்கிணைப்பு பணிகளை செய்த ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரனுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பல ஆலயங்கள் இந்த நிதியை பெறுவதற்கு மனு செய்த போதிலும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு 123 ஆலயங்கள் நிதி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு காசோலை வழங்கப்பட்டதாக நடராஜா தெரிவித்தார்.
94 ஆலயங்களின் பொறுப்பாளர்கள் நேரடியாக வந்து காசோலையைப் பெற்றுக் கொண்ட வேளையில் பிற கோவில்களுக்கு அந்த நிதி அவரவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என நடராஜா குறிப்பிட்டார்.
இதனிடையே 3,000 பேர் அமரக்கூடிய புதிய மண்டபம் பத்துமலையில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருவதாகவும் நடராஜா தமதுரையில் தெரிவித்தார்.