கோலாலம்பூர், நவ 25 – மியன்மார் லவுக்காயிங்கில் சிக்கிக் கொண்டுள்ள 120 மலேசியர்கள் நாளைக்குள் தாயகம் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளியுறவு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் அங்கிருந்த வெளியேற முடியாமல் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கையை வெளியுறவு அமைச்சு செய்து வருவதாக விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. எனினும் மலேசியர்கள் அங்கிருந்து வெளியேறுவது மியான்மார் மற்றும் சீனாவிலுள்ள அதிகாரிகளின் அனுமதியைப் பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது.
சீனா மற்றும் மியன்மார் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் முதலில் 26 மலேசியர்கள் அங்கு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இணைய மோசடி கும்பலால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு லவுக்காயிங் வட்டாரத்தில் 120க்கும் மேற்பட்ட மலேசியர்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் கும்பலினால் ஏமாற்றப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் லவுக்காயிங் வட்டாரத்தில் ஆயுதம் ஏந்திய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கும்பல் மேற்கொண்ட தாக்குதலால் சீனாவுடனான எல்லையைக் கொண்ட அந்த வட்டாரத்தில் கலவரம் மூண்டது.