![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-04-Jun-2024-06-16-PM-9831.jpg)
புத்ராஜெயா, ஜூன்-4, வேலை விசா கிடைத்தும், மே-31-ஆம் தேதிக்குள் இந்நாட்டுக்குள் நுழையத் தவறிய வங்காளத்தேசத் தொழிலாளர்களுக்கு, கால அவகாசம் நீட்டிக்கப்படாது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்ஃபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் ( Datuk Seri Saifuddin Nasution Ismail) அதனைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போதுமான அளவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது; அது குறித்தும் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆக, தொழிலாளர்களைத் தருவிக்கத் தேவையானவற்றைச் செய்து முடிக்க முதலாளிமார்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் கூறினார்.
கோட்டா அங்கீகரிக்கப்படுவது, சுகாதாரப் பரிசோதனை, விசா பெறுவது, விமான டிக்கெட் முன்பதிவு என எல்லா அம்சம்ங்களையும் கருத்தில் கொண்டே அவர்களுக்கு அக்கால அவகாசம் வழங்கப்பட்டதாக டத்தோ ஸ்ரீ சைப்புடின் விளக்கினார்.
எனவே, குறித்தக் காலத்திற்கு மலேசியா வந்திறங்கிய 20 ஆயிரம் வங்காளதேசத் தொழிலாளர்களை மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
மே 31-ல் முடிவடைந்த அக்காலக்கெடுவை நீட்டிக்குமாறு வங்காளதேச அரசாங்கம் மலேசியாவைக் கேட்டுக் கொண்டிருப்பது குறித்து கேட்ட போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
சுமார் 17 ஆயிரம் வங்காளதேசத் தொழிலாளர்கள், வேலை விசா வைத்திருந்தும், மே 31-ஆம் தேதிக்குள் மலேசியா வந்திறங்கத் தவறியதாகக் கூறி அந்நாட்டரசு மலேசியாவிடம் அக்காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியுள்ளது.