
கோலாலம்பூர், மே-4-பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி , தாம் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று வலியுறுத்தி, இன்று சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாமல் MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) தனது வாக்குமூலத்தை அளிக்கப் போவதாகக் கூறினார்.
மேலும் தனது வாக்குமூலப் பதிவில் சட்டப் பரிந்துரை தேவைப்படும் அம்சம் எதுவும் இல்லை என்பதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் MACC குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடிவு செய்தால், நாங்கள் அதை நீதிமன்றத்தில் தற்காத்துக் கொள்வோம் என்று MACC தலைமையகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொருளாதார அமைச்சிற்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சிப் வடிவமைப்பு நிறுவனமான Arm Holdings சிற்குகுமிடையே ஒத்துழைப்பின் கீழ் செய்யப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் பொருளாதார அமைச்சரான ரபிஸியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக அவர் வலியுறுத்தினார்.
அரசு சார்பற்ற அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெறும் இந்த விசாரணைக்கு உதவுவதற்காக, ரபிஸி காலை மணி 9.31க்கு MACC தலைமையகத்திற்கு வந்தார்.



