கோலாலம்பூர்,ஜூன் 16- பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நம்மைப் பாதுகாத்து வளர்க்கும் தெய்வம் தாய் என்றால், நமக்கு வழிகாட்டியாய் இருந்து நமக்கான தேவைகளைக் கண்டறிந்து அதை நிறைவேற்ற வாழ்நாளெல்லாம் அயராது பாடுபடும் இன்னொரு தெய்வம் நமது தந்தை என்று ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். தந்தையருக்கான சிறப்பு தினத்தில் அனைவருக்கும் முதலில் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், தங்களின் வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளின் நலன்களுக்காகவும் கடுமையாக உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் தந்தையர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
நம் மீது தந்தையர்கள் அளவிட முடியாத அன்பு செலுத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கண்டிப்புடன் நம்மை அவர்கள் வளர்ப்பதற்குக் காரணங்களும் உண்டு. தங்களின் பிள்ளைகள் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையும், தன்னை விட தனது பிள்ளைகள் வாழ்வில் பன்மடங்கு முன்னேறி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமும் தான் தந்தையர் நம் மீது கண்டிப்பைக் காட்டுவதற்கான காரணங்களாகும். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தந்தையரும் இந்த நேரத்தில் தங்களின் பிள்ளைகளின் அடுத்தகட்ட கல்வி என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுப்பதில் தங்களின் நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டுக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்கு அடுத்த கட்டக் கல்விப்பாதையைப் காட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய சமூகத்தின் தந்தையருக்கு மஇகாவின் மூலமும், எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூலமும் எங்களால் ஆன அனைத்து உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க நாங்கள் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உறுதிமொழியையும் இந்த வேளையில் வழங்க விரும்புவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.